மாசற்ற ஜோதி
நடந்து செல்லும் தூரம்தான் ஞானசபை நான் பிறந்து வளர்ந்த வீட்டிலிருந்து. எம் ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ராமலிங்கம் இருப்பர். எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்ட வயதில் பிறர் உதவியின்றி முழுமையாய்ப் படித்த முதல் வாழ்க்கை வரலாறு அவருடையதே. அன்றும் அழுதுகொண்டே தான் படித்தேன். என் சகோதரி எப்போதும் அதி விரைவாக படிக்கக்கூடியவர். எங்கள் அன்னை தினசரி மற்றும் வார இதழ்களில் வரும் ராசி பலன், ஆன்மிக கதைகள், ஸ்தல வரலாறு போன்ற அவருக்கு ஆர்வமூட்டுபவற்றை சகோதரியையோ சகோதரி இல்லாத சமயங்களில் என்னையோ வாய் விட்டு வாசிக்க சொல்லி கேட்பார். ஐந்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாளில் வீட்டருகில் வசித்த வயதான பாட்டிகள், சிறுமிகள் மற்றும் எம் அன்னையுடன் ஞானசபை அருகில் இருந்த வள்ளலார் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அறைக்கு பெரியவர்களுக்கு 25 பைசா நுழைவு கட்டணம், குழந்தைகளுக்கு இனாம் என்று 1 ரூபாய் 25 பைசா கட்டணம் செலுத்தி எல்லோரும் உள்ளே சென்றோம். வள்ளலாரின் வாழ்வில் பிறப்பு முதல் ஜோதியுடன் கலந்தது வரை நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை படங்களாக வரைந்து ஒவ்வொரு படத்திற...